தமிழ் எதிரிகள்


தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்!
கல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்குவோம்!

தமிழ்மொழியை ஆங்கில மொழி அழித்து வருகிறது! தமிழர்களிடையே தமிழ் மொழி ஆர்வம் குறைந்து வருகிறது என்ற கடுமையான எதிர்ப்புகள் தற்பொழுது தமிழகம் எங்கும் உலவி வருகிறது!
   
இந்த எதிர்ப்புகளுக்குத் தலைமையேற்பவர்கள் பெரும்பாலும் தமிழகத்தை இதுவரை ஆண்டு வந்துள்ளவர்கள்தாம்! இவர்கள் தவிர தங்களைத் தமிழ் மொழிக்குக் காவலர்களாகத் தங்களைத் தாங்களே அறிவித்துக் கொண்டு, புதிதாக ஆட்சி பீடம் ஏறத் துடிப்பவர்கள் பலரும் தற்பொழுது தமிழகத்தில் புற்றீசல் போலப் புறப்பட்டுள்ளனர்!

இவர்களின் அம்பு முனையின் இலக்கும் இலட்சியமும் தமிழக முதல்வர் பதவியினைக் குறி வைத்துத்தான்! இடையில் சிக்கிக்கொண்டு இவர்களின் அம்பு துளைத்து இரத்தம் சிந்துவது தமிழினமும் தமிழ் மொழியும்தான்!

தமிழினம் வழக்கம்போல நதி மூலம் ரிசி மூலம் பார்க்கக்கூடாது என்ற சொல் வரிகளுக்கேற்ப பழைய காவலர்களையும் ஏற்றுக் கொண்டு, புதிய காவலர்களையும் ஏற்றுக் கொண்டு, தங்களின் பிள்ளைகளை ஆங்கில வழிக் கல்விக்கூடங்களில்தான் தொடர்ந்து சேர்த்து வருகின்றனர்! தங்களின் குழந்தைகளின் எதிர்காலம் நிச்சயம் அரசுப்பள்ளிகளில் படிப்பதால் உயர்வு பெறும் என்ற நம்பிக்கையைத் தமிழினம் முழுவதுமாக இழந்து விட்டனர்!

அதே சமயம் மக்கள் ஏனோ இன்று வரை இந்தத் தமிழ் மொழிக் காவலர்களின் தமிழ்மொழி அழிகின்றது என்ற வார்த்தை மாயங்களில் மயங்கிக் கொண்டுமிருக்கின்றனர்! தமிழ் மொழியை அழிக்க இன்னொரு மொழி தேவையில்லை! அது வடமொழியோ அல்லது ஆங்கிலமோ, எதுவாக இருந்தாலும் இங்கு அதுவல்ல பிரச்சினை! தமிழுக்கு எதிரிகள் யார் என்பதுதான் இங்கு பிரச்சினையே!

தமிழ்மொழி! தமிழ்நாடு! தமிழினம்! என்று கூப்பாடு போடுபவர்கள் தமிழ் மொழி அழிவிற்கு பிற மொழிகளின் ஆதிக்கத்தின் பங்கு என்ன என்பதற்கு காரணம் கற்பிப்பதை முதலில் நிறுத்த வேண்டும்! பிறகு நமது மொழி அழிவிற்குத் தங்களின் பங்கு என்ன என்பதைச் சற்று அறிவு பூர்வமாக உள்ளுணர்வுடன் சற்று தனது மனசாட்சியை இங்கு முன்னிறுத்திக் கொண்டுதான் பேசவோ எழுதவோ அல்லது மேடை போட்டுக் கூப்பாடு போடவோ செய்ய வேண்டும்!

உண்மையை எழுத வேண்டுமென்றால் தமிழினத்திற்கும், தமிழ் மொழிக்கும், தமிழ் பண்பாட்டிற்கும், எதிரிகளே இவர்கள்தாம்! என்னைக் கேட்டால் வடமொழி ஆதிக்கமும், வடவர்களின் சாதிமத, இன, உணர்வுகளின் மேலாதிக்கமும், தமிழகத்தில் நிரந்தரமாக வேறூன்றியதற்கு இவர்கள்தான் காரணம் என்பேன்!

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகப் பிறப்பெடுத்து தங்களை, தங்கள் சுயநல நோக்கங்களை, தங்களின் வாழ்வாதாரங்களை வளப்படுத்திக் கொள்வதற்காக, எதையும் இழந்து, எதையும் அடையத் துடிக்கும் சுயநலவாதிகள்தான் இந்தத் தமிழினக் காவலர்கள்!

இன்று ஆங்கில மொழி ஆதிக்கம் பன்மடங்கு பெருகி நிற்பதற்கு தலையாய காரணமே இந்தத் தமிழ்மொழிக் காவலர்கள்தாம்! என்ன ஒரு வருத்தமென்றால் பிறர் முதுகிலுள்ள அழுக்குதான் இவர்களுக்கு தெரிகிறது! தன் முதுகிலுள்ள அழுக்கு இவர்களுக்கு தெரிவதில்லை! தெரிந்துதான் என்ன நடந்துவிடப் போகிறது? இவர்களின் அழுக்கு தொலைந்து விட்டால் தமிழ்மொழி, மீண்டும் உலகின் முதலில் தோன்றிய மொழியாக அல்லவா மாறிவிடும்! அப்படி மாறிவிட்டால் இவர்கள் எப்படி வாழ முடியும்? இவர்களின் உல்லாச வாழ்வு எப்படித் தொடர முடியும்?

தமிழர்கள் அறியாமையில் வாழ்ந்திருந்தால்தான், இது போன்ற தமிழ் மொழிக் காவலர்களின் வாழ்க்கையும் தொடர முடியும்! அதற்குத்தான் இந்த தமிழ் மொழிக் காவலர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்! அதில் வெற்றியும் பெற்று வருகின்றனர்!

இனியாவது தமிழ் மொழிக்கு எதிரிகள் யாரென்பதை கட்சி உணர்வுகள், சாதி, மத, இன உணர்வுகளைச் சற்றுத் தள்ளி வைத்துவிட்டு, தமிழக மாணவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!

தமிழகம் இந்த தேசத்தின் விடுதலையைச் சந்தித்த பிறகு பல்வேறு தலைவர்களை முதல்வர்களாகக் கண்டுள்ளது!      இவர்களில் கல்விக்கென பிரதான இடம் தந்து, படிக்காத பாமரர்களையும் படிக்க வைக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் செயல்பட்டு, அதில் வெற்றியும் கண்டவர் படிக்காத மேதை காமராசர்! இவரது மதிய உணவுத் திட்டத்தின் விளைவாகத்தான் வசதி வாய்ப்பற்ற, ஒருவேளை உணவிற்கே வழியற்ற பல ஏழைக் குழந்தைகள் ஓரளவாவது படிப்பறிவு பெற முடிந்தது!

படிக்காத மேதையின் ஆட்சிக்காலம்தான் தமிழகத்திலுள்ள இன்றைய அரசுப் பள்ளிகளின் பொற்காலம் எனலாம்! அதுதான் வரலாற்றுச் சாதனை! அதற்குப் பின்னர் வந்தவர்களின் ஆட்சிகளில்தான் அரசுப் பள்ளிகளின் தரம் குறையத் துவங்கியுள்ளது! அரசுப்பள்ளிகளுக்கு இருண்ட காலம் தொடங்கியதுவும், தமிழ் வழிக் கல்விக்கு அழிவு காலம் தொடங்கியதுவும், இந்தக் கால கட்டத்தில்தான்!

இது நான் ஏதோ கற்பனையில் எழுதுகின்ற கதையல்ல! இந்த திராவிட ஆட்சியாளர்களின் குழப்பமான கல்விக் கொள்கைகளால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவன் நான்! எனது கல்வி வாழ்க்கை அடியோடு தொலைந்த அந்தக் காலம் முதல் இன்று வரை அரசுப் பள்ளிகளின் இருண்ட காலத்தை அனுபவ ரீதியில் கண்டு வந்துள்ள வேதனையின் வெளிப்பாடுதான் இந்த குமுறலின் தாக்கம்!

தமிழ் மொழிக் காவலர்களின் ஆட்சிக் காலத்திற்கு முன்பு வரை, அங்கொன்றும் இங்கொன்றுமாக அதுவும் ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற அடையாளத்தின் மிச்சமாக, கிறித்தவர்களால் நடத்தப்பட்ட ஆங்கில வழிக் கல்விக் கூடங்கள்தான் தமிழகத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தன! ஆனால் தமிழ் மொழிக் காவலர்களின் ஆட்சிகள் குறிப்பாக திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் தமிழகத்தில் வேறூன்றத் துவங்கிய பின்னர்தாம்  அரசுப் பள்ளிகளின் தரம் படுவேகமாகச் சரியத் துவங்கியது!

   உண்மையிலேயே தமிழ் மொழிக் காவலர்கள் தமிழுக்கென பாடு பட்டிருந்தால் இன்றுள்ள புற்றீசல் ஆங்கில வழிக் கல்விக்கூடங்கள் தமிழகத்தில் தலையெடுத்திருக்கவே முடியாது! ஆங்கில வழிக் கல்விக் கூடங்கள் தலையெடுத்து அவர்களுக்கு வளமான வாழ்வு தொடர்ந்த இன்றுள்ள நிலைக்கு முழுக் காரணமே திராவிடக் கட்சிகள்தான்!

இவர்களின் ஆட்சியில்தான் ஆங்கில வழிக் கல்விக்கூடங்கள் ஏராளம் தொடங்கி நடத்த அனுமதி தரப்பட்டு தமிழக நடுத்தர மக்களின் உழைப்பினைச் சுரண்டும் வணிக வளாகங்களாக மாற்றம் பெற்றன!

தமிழின உணர்வும் தமிழ் மொழி உணர்வும் இவர்களுக்குச் சிறிதளவேனும் இருந்திருந்தால் இவர்களின் ஆட்சிக்காலத்தில்;  புதிய ஆங்கில வழிக் கல்விக்கூடங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு  இவைகளை விடச் சிறப்பான முறையில் உலகத்தரத்திற்கு அரசின் தமிழ் வழிக் கல்விக்கூடங்கள் பெருகி இருக்க வேண்டும்!

அப்படித் தமிழ்வழியில் சிறப்பான கல்விமுறை தமிழகத்தில் கிடைத்திருந்து இவர்கள் மொழியில் சொல்வதென்றால் சொரணையற்ற தமிழினம் தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழிக் கல்விக்கூடங்களில் சேர்த்துத் தமிழ் மொழியை மறந்து ஆங்கில மொழிக்கு அடிமையாகியிருந்தால் இன்றுள்ள தமிழ் மொழிக் காவலர்களின் புலம்பல்கள் நியாயமென்று நானும் ஒத்துக் கொள்வேன்! மேலும் வெள்ளையருக்கோ அல்லது அவர்களின் மதத்தைப் பின்பற்றுகின்ற தமிழகத்தில் பிறந்து கிறித்தவராக வாழ்கின்ற சிறுபான்மைக் கிறித்தவர்களுடைய கல்விக் கூடங்கள்தான் விச மரமாக வளர்ந்து தமிழ்ப் பயிரை மேய்ந்திருக்க வேண்டும்! அதுதான் நடந்திருக்க வேண்டியது!

ஆனால் நடந்த கதையோ வேறு! நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் போன்று ஒரு வருடம் ஒரு சட்ட மன்ற உறுப்பினராகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகவோ, வாக்கு வங்கியை வளைத்து வைத்திருக்கும் ஒரு சாதித் தலைவராகவோ, அல்லது குறைந்தது ஒரு தெருவின் மக்கள் பிரதிநிதியாக இருந்துவிட்டாலே ஒரு கல்விக் கூடம் தொடங்கி நடத்துமளவிற்கு பணம் புரட்ட முடிகின்றதென்றால் அதுதான் நமது ஊழல் திராவிடக் கட்சிகளின் சாதனை!

இவர்களைத் தூற்றியும் துதிபாடியும் தங்கள் கட்சிகளை வளர்த்துக் கொண்டவர்களும், இவர்களின் நடிப்பாற்றலைக் கற்றுக் கொண்டு வித்தை காட்டும், புதிய புதிய அரசியல்வாத மதவாத, நடிகவாதிகள் வசம்தான், இன்றுள்ள பெரும்பான்மையான ஆங்கில வழிக் கல்விக்கூடங்கள் உள்ளன!

வெளிப்பார்வைக்கு அடித்துக் கொண்டு உள்ளுக்குள் உறவாடித் தமிழினத்தை வேரறுக்கும் இவர்களின் புலம்பல்கள் தொடர்ந்தால்தான் அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கென ஒதுக்குகின்ற வரிப்பணத்தை ஏய்க்க முடியும்! அப்படிக் கிடைக்கும் ஊழல் பணத்தை தங்களின் சொந்தக் கல்விக்கூடங்களில் முதலீடு செய்து விட்டு தமிழினத்தை முன்னேற விடாமல் செய்து தங்களின் வாக்கு வங்கியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்!

இப்பொழுது புரிகின்றதா? நமது தமிழினக் காவலர்களின் தமிழ்மொழி ஆதரவு நடவடிக்கைகளின் பின்னணி! இவர்களின் புலம்பல் நின்று விடுகின்ற ஒரு நிலை உருவாகி விட்டதென்றால் தமிழினம் விழித்துக் கொண்டதென்ற காலம் தொடங்கி விட்டதென்று உறுதியாகக் கூற முடியும்!

அன்று தமிழகத்தில் சாதி மத பேதமற்ற உலகத்தர அரசுப் பள்ளிகள்; மட்டுமே நிலைத்திருக்கும்! நம் அரசியல்வாதிகளின் ஆங்கில வழிக் கல்விக்கூடங்கள் ஒன்று நடத்த முடியாத நிலையில் மூடப்பட்டிருக்கும்! அல்லது அரசின் வசம் இந்தப் பினாமிக் கல்விக் கூடங்கள் ஒப்புவிக்கப்பட்டு தரமான தமிழ் வழியில் முற்றிலும் புதிய சூழ்நிலையில் எதிர்காலத் தமிழினம் உலகத்தரக் கல்வியினை நிச்சயம் பெறும் நிலை உருவாக்கப்படும்!

வானில் தவழும் நிலவில் நாளை பள்ளிக்கூடம் நடந்தால் அது முதலில் தமிழ்ப் பள்ளியாகத்தான் நிச்சயம் இருக்கும்!

ஆக
விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்!
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!