இந்த தேசத்தில் மரண தண்டனைகள் தேவையே இல்லை!


இந்த தேசத்தில் மரண தண்டனைகள் தேவையே இல்லை!

பிரபஞ்சவிதி என ஒன்று உண்டென்பது உலக மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒன்றாகும். ஒரு வினை என்றால் அதற்கு எதிர்வினை உண்டென்பதே பிரபஞ்ச விதியாகும். இந்த விதிக்கு எவருமே தப்ப இயலாதென்பதுதாம் உண்மையாகும்.

சீக்கியர்கள் தங்களுக்குத் தனிநாடு வேண்டுமெனப் போராடியபோது அவர்களது வாதத்திற்கு வழுவான பின்னணியாக இருந்தது மதம்தாம். மதப் பின்னணியில் போராடிய தீவிரவாதிகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளக் கேடயமாகப் பயன்படுத்தியது தங்களின் புனிதத்தலமான பொற்கோயிலைத்தாம். அத்தகு புனிதத்தன்மை வாய்ந்த கோவிலுக்குள் இராணுவத்தை அனுப்பியது இந்திரா அன்iனையின் தவறென்பது சீக்கியர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்திய வினையாயிற்று.
அதுவே அன்னையின் துர்மரணத்திற்குக் காரணமுமாயிற்று. அவரின் மரணத்தைத் தொடர்ந்து எழுந்த கலவரங்களால் பலியான சீக்கிய உயிர்கள் எத்துணை எத்துணை. இந்தப் படுகொலைகளை நிறைவேற்றியவர்கள் எவர் என்பது உலகினுக்கே தெரியும்.

இலட்சச் கணக்கான இந்தியர்களைக் கொன்று குவித்துத் தங்கள் காலனி ஆதிக்கத்தை நிலைநாட்டிய ஆங்கிலேயர்களை எதிர்த்த ஒருவர் அவர்களின் செயலுக்குப் பதிலடியாக ஆயுதத்தை ஏந்தியிருந்தால் சாதாரண காந்தியாகச் சுடப்பட்டு இறந்திருக்கலாம். ஆனால் அந்த மகத்தான மனிதர் ஏந்திய ஆயுதமோ வெள்ளையர்களின் ஆயுதத்தைச் சாம்பலாக்கி இந்த தேசத்தை உலக அரங்கில் உயர்த்தி மகாத்மாவாக அவரையும் உயர்த்தியது.

சீக்கியர்கள் விசயத்தில் மகாத்மா என்ற ஒருவர் இந்த தேசத்தில் இருந்திருந்தால் அந்தப் படுகொலைகள் இருந்திருக்காதென நாம் அறிவோம். சுதந்திரத்திற்கு முன்வரை இருந்த காங்கிரசு என்பது முழுக்க முழுக்க அகிம்சையையே ஆயுதமாகக் கொண்டு போராடிய காங்கிரசாகும்.
இந்திரா அன்னைக்குப் பிறகு ஓரு விமான ஓட்டியாகத் திறமையாகத் திகழ்ந்த இராசீவ் காந்தியை விதிதாம் இந்த தேசத்தின் பிரதமராக்கியது. அவரது அரசியல் அனுபவ அறிவுக் குறைவுதாம் இலங்கைத் தீவில் இந்திய அமைதிப்படையை அனுப்பிய மாபெரும் தவறினைச் செய்தது.

வருடக்கணக்காக உணவின்றித் தவித்த ஒருவன் முன்பு அரிதாகக் கிடைக்க இருந்த உணவினை வேரொருவர் வந்து தட்டிவிட்டு மண்ணில் கொட்டினால் என்ன நிகழும் என்பது உலகோருக்குச் சொல்லித் தெரியப்போவதில்லை.
பசியுற்றிருந்தவனின் வன்பசிக்கொடுமை வெறியாகத்தாம் மாறும். அந்தச் சூழலில் அவனது செயல் அகிம்சையாக இருக்காதுதாம். தமக்குக் கிடைக்க இருந்த உணவினைத் தட்டிவிட்டவனைப் பாய்ந்து குதறத்தான் அவன் மனம் துணியும்.

இதுதாம் இராசீவ் விசயத்திலும் நிகழ்ந்தது. அவரது தவறான முடிவால் இந்திய அமைதிப்படை இலங்கையில் முகாமிட்டு இழந்த உயிர்கள் எத்தனையோ நாமறியோம். ஆனால் இலங்கைப் படைகளை வெற்றி கொண்டு தங்களின் உரிமை பூமி எனும் இலட்சியத்தை அடையப் போராடிய விடுதலைப்புலிகளை ஒடுக்குவதாக நினைத்து சிங்கள இராணுவத்திற்கு ஓய்வு கொடுத்துவிட்டு இந்திய இராணுவம் போர் வேட்கையில் இலங்கையில் பாய்ந்து தனது வினையைச் செய்ய இராசீவின் விதி அப்பொழுதே எழுதப்பட்டு விட்டதெனலாம்.

வன்முறைக்கு வன்முறைதாம் தீர்வென்பது இதனால் நன்கு விளங்குகின்றது. புலிகளின் செயலை நியாயப்படுத்த இது எழுதப்படவில்லை.
அமைதிப்படை என்ற பெயரில் இந்திய இராணுவம் அப்பாவித் தமிழ் உயிர்களையும் வேட்டையாடியிருந்தால் அதன் விளைவை எய்தவர் அனுபவித்தே தீரவேண்டுமென்பதே பிரபஞ்ச விதியாகும். அதுவே இராசீவின் மரணத்திற்கு வழியாயிற்று.

தமிழகத்தில் பிறந்த நாமெல்லோரும் வள்ளுவரைப் போற்றிப் புகழுகின்றோம். ஆனால் அவரது குறள் நெறிகளில் உள்ள விளக்கங்களை தவறாக புரிந்து கொண்டு வந்துள்ளோம்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்துவிடல்  என வள்ளுவர் 314 ஆவது குறளில் எழுதியுள்ளார்.

அதே வள்ளுவர் தமது 530 ஆவது குறளில்
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களை கட்டதனொடு நேர் என எழுதியுள்ளார்.

இரு குறள்களிலும் ஒறுத்தல் என்ற பொருளில்தாம் அவர் எழுதியுள்ளார். ஆனால் 530 ஆவது குறளுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் இத்தகையவர்களைக் கொல்ல வேண்டும் என வள்ளுவர் எழுதியதாக முரண்பாடாக எழுதியுள்ளனர்.

தமிழர்கள் களை எடுத்தல் என அழைப்பதுபோலவே பல நேரங்களில் வயல் திருத்தி அமைத்தோம் என வழங்குவர். அதாவது வயலில் தேவையற்ற களைகளை நீக்குதலுக்குத் திருத்துதல் என்ற பொருளும் உண்டு.

வள்ளுவர் தம்முடைய மற்றொரு குறளில் கடுமையான குற்றம் செய்தவர்களையும் ஆள்பவர் கடுமையாகத் தண்டிப்பது போலக்காட்டி மென்மையாகத் திருத்தி நல்வழிப்படுத்த வேண்டும் என்கிறார்.

ஆக வள்ளுவர் ஒறுத்தல் என எங்கு எழுதினாலும் குற்றவாளிகளைத் திருத்துதல் என்ற ஒரே அர்த்தத்தைத்தாம் வெளிப்படுத்தியுள்ளார். நாம்தாம் தவறாகப் புரிந்துகொண்டு கொல்லுதல் எனும் நிலைக்கு விளக்கம் காணும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம்.

ஆள்பவர்களுக்குரிய இலக்கணங்களை வள்ளுவம் கூறிய வழியில் முழுமையாக நடத்த முற்படாவிட்டாலும் கொஞ்சமாவது நடைமுறைப்படுத்த முன்வரலாமே.

கொல்லாமை என்ற தலைப்பில் வள்ளுவம் வகுத்துள்ள பத்து குறள்களை ஆட்சியாளர்கள் குறிப்பாக காங்கிரசார் சற்று புரிந்து செயல்பட வேண்டும்.
நோயுடம்போடு வறுமைமிக்க தீய வாழ்க்கை உடையவர்கள் முற்பிறப்பில் உயிர்களை அவை பொருந்திநின்ற உடம்புகளிலிருந்து நீக்கியவர் என வள்ளுவர் குறிப்பிடுவது போல உங்களின் அடுத்த பிறவியில் நீங்கள் வாழ விரும்பினால் உங்கள் விருப்பப்படி மரண தண்டனையை ஆதரியுங்கள். ஆனால் தயவு செய்து அதை நிறைவேற்றும் சாதாரண சிறைக்காவலருக்குத்தாம் அது அமையும் எனத் தப்புக் கணக்குப் போட்டுவிடாதீர்கள். இது மரண தண்டனையை ஆதரிக்கிற அனைவருக்குமே ஒன்றுதாம்.

உங்கள் தலைவர் இராசீவின் மரணம் விரும்பத்தக்கதல்லதான். ஆனாலும் வள்ளுவம் இதோ இந்தக்  குறளைப் படித்து உங்களை மேம்படுத்திக்கொள்ள அழைக்கிறாரே!

பெயக் கண்டும் நஞ்சுண்டு அமைவர்
நயத்தக்க நாகரீகம் வேண்டுபவர்
இதை எழுதியவரும் வள்ளுவர்தாம்!

புலிகளின் ஆயுதவழி தமிழீழப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வல்ல.
காந்தி ஒருவேளை இந்த தேசத்தை ஆண்ட வெள்ளையருக்கு எதிராகத் துப்பாக்கி தூக்கியிருந்தால் இந்த தேசம் அகிம்சை தேசம் என்ற பெயரை அடைந்திருக்கவே முடியாது. ஏன் இன்றைய காங்கிரசார் உல்லாசவாசிகளாக காந்தியாரால் இந்த சொகுசு வாழ்க்கையை அடைந்திருக்கவும் முடியாது. விடுதலைப் புலிகள் போல தொடர்ந்து வெள்ளையரிடம் சண்டையிட்டுக்கொண்டுதான் இருந்திருக்க வேண்டும்.

அதுபோலவே நாம் தவறிழைக்கும் சிறுபான்மைச் சிங்களரை விடுத்து ஒட்டுமொத்த சிங்களரையும் ஏன் திட்டித்தீர்க்க வேண்டும்?

பிற மொழியினர் தமிழர்கள் கெட்டவர்கள் என்றால் ஒட்டுமொத்த தமிழர்களுக்குமே கோபம் ஏற்படும். இது ஒரு இனத்தின் ஒட்டுமொத்த உணர்வு. அதுபோலத்தான் ஒட்டுமொத்த சிங்களரையும் திட்டித் தீர்ப்பது பிரச்சினையை மேலும் வளர்க்கத்தான் செய்யும்.
குற்றச் சிங்களவர்களின் தவறுகளை காந்தீய வழியில் பெரும்பான்மைச் சிங்களரிடம் கொண்டு சேர்த்து நியாயம் கேட்போம்.

உண்மையிலேயே புத்தம் சரணம் கச்சாமி என மனித உயிர்களை புத்தர் வழியில் மதிப்பவர்களாக  இருந்தால் அவர்கள் ஒருவேளை நிச்சயம் நம்முடைய நியாயத்தைப் புரிந்து கொள்வர். அவர்களாகவே இராசபட்சேக்களைத் திருத்துவர்,

வள்ளுவம் ஊழ்வினை எனக் குறிப்பிட்டு பிறவிகள் உண்டென உறுதிபடுத்தியுள்ளார்! அதே சமயம் அவரது குறளிலுள்ள கருத்துகளுக்குத் தவறாகத் தெளிவுரைகள் வழங்கப்பட்டு தவறான அர்த்தம் கொள்ளப்பட்டுவிட்டது!

உதாரணத்திற்கு எழு பிறப்பும், எழுமை எழுபிறப்பும் என அவர் எழுதியுள்ள பல குறள்களுக்கும் தெளிவுரை எழுதிய அறிஞர்கள் பக்தி மார்க்கத்தவர்களாக இருந்ததால் அவரது கருத்தாகிய எழு பிறப்பு என்பதை ஏழு பிறவிகள் எனத் தவறாகக் குறிப்பிட்டுவிட்டனர்!

அதிகாலைப் பொழுதில் வானில் உதிக்கும் கதிரவனைப் பார்க்கும் ஒவ்வொரு நாளிலும் அக்கதிரவனை எழுஞாயிறு எனத்தான் இன்றுவரை தமிழினம் அழைத்துப் போற்றி வந்துள்ளது!
உண்மையில் கதிரவன் நிலையாக இருக்க அதை சுற்றி வரும் பூமியில் வாழும் மனிதன்தான் ஞாயிறு கிழக்கில் எழுந்து மேற்கில் மறைவதாகக் கற்பனை செய்து கொண்டான்! தமிழும் இதற்கு விதிவிலக்கல்ல! எனவேதான் எழுஞாயிறு எனக் குறிப்பிட்டுத் தினமும் உதிக்கும் ஞாயிறைப் போற்றியது!
இதை அடிப்படையாகக் கொண்டுதாம் வள்ளுவர் தௌளத்தெளிவாகப் பிறவிகள் எழுகின்ற இயல்பினை உடையது என உறுதிபடப் பாடி வைத்தார்! நாம்தான் இதனை மதவாதிகள் பரப்பிய ஏழு பிறவிகள் எனத் தவறாக புரிந்துகொள்ளும் மன நிலைக்குத் தள்ளப்பட்டோம்!
மிகச்சிறந்த பகுத்தறிவாளராக விளங்கிய பட்டினத்தாரும் பிறவிகள் உண்டென்பதை ஆணித்தரமாக அப்பன் எத்தனை அப்பனோ அம்மை எத்தனை அம்மையோ எனத் தம் தாய்மைப் புலம்பலில் பாடி வைத்தார்!
ஒவ்வொரு மனிதரும் தம்முடைய எண்ணங்களை ஆழ்மனதில் செழுத்தினால் தாம் சென்ற பிறவியில் எத்தகையவராக இருந்திருப்போம் என்பதை நிச்சயம் உணர முடியும்!
அப்பொழுதுதான் இன்றும் தம் பிறவி அறியாமல் வாழ்ந்து வரும் பாரதிகளும் காந்திகளும் தெரசாக்களும் தம் சுயம் உணர்ந்து  மீண்டும் உலகு தழைக்கப் பாடுபட முடியும்!
மேலும் தமிழ் மொழி ஒன்றுதான் பிறப்பின் அர்த்தத்தை முழுiமாக தம் மொழியில் சிறப்பித்துள்ளது! உலகில் மனித இனம் தவிர்த்த தாவர இனத்தை தமிழ்மொழி பயிர் என அழைக்கிறது! அது போலவே மனித தேகத்தில் நிலை பெறுவதை உயிர் என அழைத்தது!
பயிர்கள் எப்படி தோன்றி வளர்ந்து வாழ்ந்து மடிந்து மீண்டும் பிறந்து வாழ்கிறதோ அவ்வாறே உயிர்களும் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மடிந்து மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து வாழ்கின்றன!
இதில் வியப்பிற்குரியது என்னவென்றால் முந்தைய பிறவிகளில் தாம் எவ்வாறு இருந்தோம் என்பதை உயிர்கள் அறிந்திராத வகையில் ஏற்படுத்தப்பட்ட இயற்கை இரகசியம்தான் வேடிக்கையான விந்தை!
ஒரு பயிர் பயிராகவே இருந்து விட்டால் பயனேதுமின்றிப் போய்விடும்! அது ஒரு நெல் நாற்றாக இருந்தால் வேறு இடத்தில் பிடுங்கி நட்டுச் சரியாகப் பராமரிக்கும்போது செழித்து வளர்ந்து நெல்மணிகளை உற்பத்தி செய்து மக்களுக்கும், வைக்கோலாகி மாடுகளுக்கும் ஏன் அதன் பின்னர் சாணமாகி உரமாகவும் விராட்டியாகி எரிபொருளாகவும் பயனாகிறது!
ஒரு கனி தரும் மரமாக அந்த பயிர் இருந்தால் வளர்ந்து ஆளாகி குளிர்ந்த நிழல் தந்து பகலில் சுவாசிக்க ஆக்சிஜன் தந்து காய்கனி தந்து உணவாகி, சருகானால் உரமாகி, காய்ந்துவிட்டால் விறகாகி, தன் வாழ் நாள் முழுக்க மனித குலம் மட்டுமன்றி பல்வேறு உயிர்களுக்கும் பயன் தரும் வாழ்வு வாழ்கிறது!
இது போலத்தான் மனித குலம் வாழ வேண்டும் என்றுதான் தமிழ்மொழி உயிர்கள் என மனித குலத்தை அழைத்தது! பயிர்களுக்கு எண்ணங்கள் இல்லாவிட்டாலும் அவை பிறருக்காக வாழ வேண்டுமென்ற எண்ணமுடையவையாகத்தான் வாழ்கின்றன!
ஆனால் சிந்திக்கின்ற ஆற்றல் பெற்ற மனிதன்தான், பல்வேறு பிறவிகள் எடுத்தும் பெரும்பாலும் பிறந்தோம் வாழ்ந்தோம் மடிந்தோம் என தம் பிறவி நோக்கம் அறியாமலே வாழ்ந்து தவிக்கிறான்! எனினும் முற்பிறவி அறியாமல் வாழ்ந்தாலும்; இன்றுள்ள மனிதனின் எண்ணங்கள்தாம் அவனது அடுத்த பிறவியை தீர்மானிக்கின்றது!
பழி பாவத்திற்கு அஞ்சாத வஞ்சகர்களின் இன்றைய வாழ்க்கை முறை அவர்களின் அடுத்த பிறவிக்கு அவர்களே வகுத்துக் கொள்ளும் ஊழ்வினையாகும்! வள்ளுவமும் ஊழ்வினை பற்றி இதைத்தான் தௌளத்தெளிவாக எடுத்தியம்பியுள்ளது!
“பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே விளையும்”
என்பது அடுத்த பிறவிக்கும் சேர்த்து சொல்லப்பட்ட கருத்துதான்!
பட்டினத்தார் இதையே தன்வினை தன்னைச்சுடும் என அழகாகப் பாடி வைத்தார்! உயிர் தாங்கிய மனித இனத்தை உரமிட்டு வளமாக்க இதை விட சிறந்த அறிவுரைகள் உலகில் எந்த மொழியிலும் இருப்பதாகத் தெரியவில்லை!
வள்ளுவம் எச்சரித்த ஊழ் வினையை மதியால் வெல்ல வள்ளுவத்தை முடிந்த அளவிற்கு பின்பற்றி வாழத்துவங்குபவர்களால்தான் நிச்சயம் முடியும்!
இதை அலட்சியம் செய்துவிட்டு பொன்னிலும் போகத்திலும் மூழ்கி அடுத்தவர் உழைப்பில் களிப்பவர்கள் போலி மதவாதிகள் கற்பனையாக திரித்த நரகில் புகப்போவதில்லை!
அடுத்த பிறவியில் அதற்கான கடும் தண்டனை இதே பூமியிலேயே இவர்களுக்கு காத்திருப்பதை பாவம் அறியாதவர்கள் அவர்கள்!
அறிது அறிது மானிடராய்ப் பிறத்தல் அறிது எனப் பாடியவரும் ஒரு தமிழன்னைதாம்.
இந்த தேசம் உண்மையிலேயே காந்தி தேசமாக விளங்க வேண்டுமென்றால் அவரது அகிம்சை எனும் ஆயுதத்தை செங்கோலாகக் கொண்டு வள்ளுவம் வகுத்த வழியில் ஆட்சி செழுத்தினால்தாம் இந்த தேசம் உலகத்திற்கே முன்னுதாரணமாகத் திகழ முடியும்.
இல்லை நாங்கள் காந்தியைக் கொன்ற கோட்சேயைத் தூக்கிலிட்டவர்கள் எங்களுக்கு அகிம்சையின் மேல் நம்பிக்கையில்லை என்று சொல்லிவிட்டால் தயவு செய்து காங்கிரஸ் என்ற இயக்கத்தின் பெயரையாவது எடுத்துவிடுங்கள். இதே பெயரிலேயே இருந்தால் அது அந்த காந்தியையே அவமதிப்பதற்குச் சமம். ஆம் காந்தி இப்பொழுது பிறந்திருந்தால்கூடத் தன்னைக் கொன்ற கோட்சேயைத் தூக்கிலிட்டது தவறென்றுதாம் வாதாடுவார். அவர்தான் காந்தி. அவர்தாம் மகாத்மா!
காந்தி உருவாக்கிய அகிம்சை தேசம் வேண்டுமென்றால் இந்த தேசத்தில் மரண தண்டனைச்சட்டங்கள் விலக்கப்பட வேண்டும். வன்முறையாளர்களை அகிம்சை வழியில் திருத்த இந்த தேசத்திற்கு வழிகாட்ட வள்ளுவச் சட்டங்களே போதும்.
கத்திக்குக் கத்தி இரத்தத்திற்கு இரத்தம் உயிருக்கு உயிர் என்பது என்றைக்கும் வன்முறைகள் தீர வழி வகுக்கப்போவதே கிடையாது.
ஒரு கட்சித் தலைவியின் கைதுக்காக வெறியுற்ற ஒரு கூட்டம் தம் சுயம் மறந்து நிகழ்த்திய படுகொலையால் தருமபுரியில் மூன்று அப்பாவிக் கல்லூரி மாணவியரின் உயிர்கள் உடலைவிட்டுப் பறந்தன. இன்று குற்றவாளிகளின் பிள்ளைகள் கண்ணீரும் கம்பலையுமாகத் தம் தந்தையரின் மரணதண்டனையை எண்ணிக் கலங்கித் தவிக்கின்றனர்.
இவர்கள் அனைவரும் ஒருவேளை அம்மூன்று மாணவியரின் பெற்றோர்களின் காலில் விழுந்து கதறி அழும் நிலை உருவானால் அப்பெற்றோர்கள் நிச்சயம் மனம் மாறித் தம் பிள்ளைகளைக் கொன்ற பாவிகளை மன்னித்து விடுங்கள் என்றுகூட நீதி மன்றத்திற்கு மனு கொடுக்கும் நிலை இந்த தேசத்தில் நிச்சயம் உருவாகும். அதுதாம் தாய்மை அதுதாம் அகிம்சை. இந்தத் தாய்மை உணர்வும் அகிம்சை உணர்வும் காலம் கடந்தும் தாய்மை உள்ளம் கொண்டவருக்கு எப்போதும் வரக்கூடும். அதுதான் இந்த தேசத்தின் வலிமைமிக்க ஆயுதம். இதைத்தவிர வலிமையான தண்டனை ஆயுதம் உலகில் வேறு எதுவுமே கிடையாது.
ஒருவேளை மரண தண்டனையில் பிடிவாதமாக இருப்பதென முடிவானால் பழிக்குப்பழி என்ற கோட்சே தேசமாக எப்பொழுதும் இந்த தேசம் இருந்துவிட்டுப் போகட்டும். அகிம்சை ஆயுதம் ஏந்திய மகாத்மா காந்தி உருவாக்கிய காங்கிரஸ் பெயரால் இங்கு மரண தண்டனைகள் இனியும் தொடரவேண்டாம். ஏதாவது கோட்சே காங்கிரஸ் அந்த தண்டனையில் பிடிவாதமாக இருந்த இந்த தேசத்தை வழி நடத்தட்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!