எந்தையே! எம் தந்தையே! கலாமே!
எந்தையே! எம் தந்தையே! கலாமே!
கண்டம் விட்டுக் கண்டம் பறக்குமாம் வேடந்தாங்கல் பறவைகள்!
இராணுவ வரிசையென முன்பின் அணி அணியாய்ப் பறக்கும் பயணம்!
முன்வரிசைப் பறவைகளின் சிறகசைவில்
ஓய்வெடுத்துப் பறந்து செல்லும் பின் வரிசை அணியும்
தம் களைப்பு நீங்கி முன் வரிசை வந்து பறக்க
முன் வரிசை அணி பின் வந்துதம் களைப்பு நீங்கும் சுழற்சிமுறை!
எங்கும் தங்கவியலா இடைநில்லா நெடுங்கடல் பயணம்தனை
முடிப்பதன் இரகசியம்தாம் மாந்தர்க்கு வியப்புமிகு செய்தி போன்றே
கண்டம் விட்டுக் கண்டம் பாயும் இடைநில்லாப் பயணம் செய்யும்
நெருப்பு ஏவுகணை தந்த எம் தந்தையே! கலாமே!
எம்மை முன்வரிசைக்கனுப்பிவிட்டுச் சற்று ஓய்வெடுக்க நினையாது
உடல் மூப்பும் கருதாமல் ஓயாதுழைத்திட்ட காரணத்தால்
அந்தோ மரணப் பெருங்கடலில் வீழ்ந்த உம்மைக் காணாது தவித்து
எம் இமைநீர் கடல்போல் பெருக எங்கும் தேடிக் களைத்திட்டோம்!
வெந்தழலில் வீழ்ந்தாலும் உயிர்த்தெழும் ஃபீனிக்சு பறவைபோல்
இராமேசுவரப் பேய்க்கரும்பிலிருந்து மீண்டும் புது உடலெடுத்து வாருங்கள்!
எம்மைத் தூங்காது துரத்தும் இலட்சியக் கனவுகள் சுமந்து நாங்கள்
உங்கள் அக்கினிச் சிறகசைவில் சற்று ஓய்வெடுத்துப் பறக்க வேண்டும்!
தாயன்போடு பறக்கும் தங்கள் அக்கினிச் சிறகசைவில்
நாங்கள் அக்கினிக் குஞ்சுகள் போல என்றும் பறந்து தொடர வேண்டும்
ஓயாது உழைத்துத்தந்த தாங்கள் எண்ணங்கள் துணை கொண்டே
கண்டம் விட்டுக் கண்டம் தாண்டிப் புதுயுக உலகம் காண்போம் நாங்கள்!
என்றென்றும் உங்கள் எண்ணங்கள் தாங்கி நீண்டாலும்
அடைந்தே தீரும் நம் இலட்சியப் பயணம்
ஒரு போதும் முடிவதில்லை! அதுவரை நாம் ஓய்வதில்லை!
என்ற நம்பிக்கைகளுடன் ஈரோட்டிலிருந்து தெ.குமாரராஜா.
கருத்துகள்
கருத்துரையிடுக