தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் தோற்கப்போவது யார்?
தமிழகத்தில் வரும் 2016 ஆம் ஆண்டுக்கான தேர்தல் உத்திகளை அனைத்து அரசியல் இயக்கங்களும் துவக்கி விட்டன. தமிழகத்தில் 1 முதல் பத்து வரை வாக்கு சதவிகிதம் உள்ளதாகக் கருதக்கூடிய (இந்த சதவிகிதம்கூட அவை தமிழகத்தின் ஏதேனும் பிரதானமான திராவிட இயக்கத்தின் தோள் மீது அமர்ந்து அவர்களுடைய வாக்கு வங்கியையும் சேர்த்துத்தான் என்பது பாமரனுக்குக்கூட மிக நன்றாகத் தெரிந்த கதை) உதிரி இயக்கங்கள் இப்பொழுதே தாங்கள்தான் அடுத்து தனித்துப் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிப்போம் என அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கின்றன. ஆளும் இயக்கம் சரமாரியான இலவசத் திட்டங்களையும் இறுதி நேரத்து அறிவிப்புகள் வாயிலாக புதிய திட்டங்களையும் அறிவித்துக் கொண்டிருக்கின்றது. இந்தத் திட்டங்களுக்கான தொகை உண்மையிலேயே அரசின் கருவூலத்தில் உள்ளதா என்பதை யாமறியோம். பிரதான எதிரி திராவிட இயக்கமோ தங்களின் பழைய தவறுகளை மக்கள் மறந்துவிட்டதாகக் கருதிக் கொண்டு மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பல்வேறு வியூகங்களை உட்கட்சிப் பூசல்களுக்கிடையே வகுத்து வருகிறது. நிதிக் குடும்பமாகத் திகழும் இந்த இயக்கத்தின் தேர்தல் நிதி வசூல் பல கோடிகளில் உள்ளதாக ஊட